தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங் கோவன், தேர்தல் பிரசாரத்தின்போது, ஓபிஎஸ் ஓட்டுக்கு 500 ரூபாய் தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள்  என்று மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் அதிமுக வேட்பாளராக களமிறக்கப் பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர்களுடன் டிடிவி தினகரன் கட்சி சார்பில் தங்கத்தமிழ் செல்வதும் போட்டியிடுகிறார். இதன் காரணமாக தேனி தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஓபிஎஸ்சுக்கு இது வாழ்வா சாவா போராட்டமாக உள்ளது.

தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது,  தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் பணம் கொடுத்து வருகிறார்கள்…

ஒரு ஓட்டுக்கு ரூ.500 கொடுத்து வருகிறார்கள் என்று கேள்வி பட்டேன்… நீங்கள் ரூ.500ஐ வாங்காதீர்கள்… அதற்கு பதிலாக ஓ.பி.எஸ்.மகனிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள்…. அவர்களிடம்  ஏராளமான பணம் உள்ளது….  அவர்கள் மக்களை  ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்த பணம் வைத்துள்ளார்கள்… என்று கூறியவர்,

இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள், கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.