குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டில்லி சென்றிருந்தார்  ஓ.பன்னீர்செல்வம்.  பிறகு  அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்றார். அங்கு சனி ஷிங்னாபூர் என்ற ஊரில் உள்ள புகழ்  பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

இதுவரை  ஓகே தான். அதன் பிறகு நடந்ததாக வரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அதிர்ச்சி அளிக்கி்ன்றன.

அதாவது அந்த சனீஸ்வரன் கோயிலில் ஓ.பி.எஸ்., அசுவமேத யாகம் செய்தார் என்பதுதான் அந்த யூகச் செய்தி. அதற்கு சான்றாக ஒரு ஒளிப்படத்தையும் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். வேறு சிலர், ஷீரடி சென்று ஓ.பி.எஸ். அசுவமேதயாகம் செய்ததாகவும் பதிவிடுகிறார்கள்.

“குதிரையோடு ஓ.பி.எஸ். இருக்கும் ஒளிப்படம் முன்பு எப்போதோ எடுத்தது. தவறுதலாக அதைப் பதிவிடுகிறார்கள்” என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்

ஆனால், “ஓ.பி.எஸ். அசுவமேத யாகம் செய்ததாக தகவல் வெளியாவது இது முதல் முறை அல்ல.

கடந்த (2016) ஆண்டு மார்ச் மாத வாக்கிலும் இப்படி ஓர் யூகச் செய்தி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தயது.

இந்த அசுவமேத யாகத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட சில அரசியல் தலைவர்கள் செய்ததாக முன்பே யூகத்தகவல்கள் வெளியானது உண்டு.

அதென்ன அசுவமேத யாகம்?

ஒரு நாட்டின் அரசன் தனது அரச குதிரையின் முதுகுப்பகுதியில் தன் கொடியை  கட்டி அவிழ்த்துவிடுவான். அந்தக்  குதிரையுடன் அவனோ அல்லது அவனது அரச பிரதிநிதியோ பெரும்படையுடன் செல்வார்கள்.  அந்த குதிரை, நாட்டு எல்லையைக் கடந்து தன் போக்கில் சென்றுகொண்டே இருக்கும்.

அந்த குதிரை செல்லும் இடமெல்லாம் அந்த அரசனுக்குச் சொந்தம். அதாவது அப்பகுதி மன்னன், கப்பம் கட்ட ஒப்புக்கொள்கிறான் என்று அர்த்தம். வழியில் வேறு நாட்டு மன்னன் அந்த குதிரையைத் தடுத்தால், போர்தான்.  படையெடுப்பு நடத்தி அவனை வெற்றிகொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து செல்லும். இப்படி  மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான்.

இந்த யாகத்தை  தற்காலத்தில்  அரசியல்வாதிகள் ஏன் செய்ய வேண்டும்?

அந்தக்காலத்தில் மன்னனுக்கு இருந்தது நாடு பிடிக்கும் ஆசை. தற்போது அரசியல்வாதிகளுக்கு இருப்பது பதவி பிடிக்கும் ஆசை.

ஆம்.. இந்த அசுவமேத யாகத்தைச் செய்தால், பெரும் பதவி கிடைக்கும் என்பது ஜோதிடர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கை. ஒருவரின் தனிப்பட்ட பலம் அதிகரிக்க,  செல்வச் செழிப்பு இன்னும் கூட, அதிகாரம் கிடைக்க, எதிரிகள் அழிய.. முக்கியமாக  ராஜயோகம் (பதவி) கிடைக்க இந்த யாகம் உதவும் என்பது நம்பிக்கை.

சரி, மீண்டும் அசுவமேத யாகத்துக்கு வருவோம்.

குதிரை சென்ற இடமெல்லாம் அரசனுக்குச் சொந்தமாகி, சக்ரவர்த்தி என பட்டமும் கட்டிக்கொண்டான். குதிரையும் நாடு திரும்பிவிட்டது.

அதன் பிறகு நடப்பதுதான், அதிர்ச்சிகரமான செயல்கள். இது குறித்து அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது? இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3ல் எழுதியிருக்கிறார். (நக்கீரன் இதழில் தொடராக வந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.)

“ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.

அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி… குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”என போகிறது ஸ்லோகம்.

அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்” – இப்படி குறிப்பிட்டிருக்கிறார் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

ராமபிரானின் தந்தை தசரதன், தர்மர் ஆகியோரும்கூட இந்த அசுவமேத யாகத்தை நடத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. இதை தனது வியாசர் விருந்து நூலில் மூதறிஞர் ராஜாஜியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

தற்போது குதிரையுடன் ஓ.பி.எஸ். இருக்கும் படத்தை வைத்து, “இரவு நேரத்தில் அசுவமேத யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே பலன் கிட்டாது” என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

 

உலகில் வேறு எங்கும் இந்த அளவுக்கு அரசியலில் அறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் கலந்திருக்குமா என்று தெரியவில்லை.