ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெகலாத் தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு ரூ.1.4 கோடி நிதியயை மரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெகலாத் சமீபத்தில் தீவிரவாத தாக்குதலில் மரணம் அடைந்த எல்லைக்  காவல் வீரர்களுக்கு ராஜஸ்தான் அரசு சார்பில் நிதி அளிக்க தீர்மானம் செய்தார். அதை ஒட்டி நிதி திரட்ட அவர் ஒரு புதிய முறையை கடைபிடித்தார். தனக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள், உள்ளிட்டவைகளை ஏலம் விட தீர்மானித்தார்.

நேற்று முன் தினம் இந்த பொருட்கள் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் சேவா சன்ஸ்தான் என்னும் தொண்டு நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது. நினைவுப்பரிசுகள், சால்வைகள் என சுமார் 350 பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இவை அனைத்தும் ரூ.5000 லிருந்து ரூ. 1 லட்சம் வரை ஏலத்தில் எடுக்கப்பட்டன.

இந்த ஏலத்தில் ரூ. 1.4 கோடி கிடைத்துள்ளது. இதை அரசு நிதியுடன் இணைத்து தீவிரவாத தாக்குதலில் எல்லைப்புறத்தில் மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி அளிக்கப்பட உள்ளது.   ஏலம் குறித்து அசோக் கெகலாத் தனது டிவிட்டரில், “எல்லைப்புறத்தை காக்க மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிப்பது அரசின் கடமை ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு தோள் கொடுக்க முன்வர வேண்டும்.” என குறிப்பிட்டு இருந்தார்.

அசோக் கெகலாத் செய்தியாளர்களிடம், “இந்த ஏலத்தில் கலந்துக் கொண்டு நிதி உதவி அளிக்க முன் வந்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு இதைப்போல் 1999 ஆம் வருடம் கார்கில் போர் நடந்த போதும் 2004 ஆம் வருட சுனாமியின் போதும் ஏலம் நடத்தி நிதி உதவி திரட்டப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கிடைத்த பணத்தின் மூலம் மரணமடைந்த வீரர்கள் குடும்பத்துக்கு அரசின் உதவியும் சேர்ந்து தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.