திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமலாகிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு அடைந்தது.   இதையொட்டி அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தன.  தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.   ஆனால் கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கேரளாவில் நேற்று 22,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,27,301 ஆகி உள்ளது.  இதில் நேற்று 131 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,458 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,761 பேர் குணமடைந்து மொத்தம் 31,60,804 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,49,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

எனவே கேரள அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.  அவ்வகையில் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் அதாவது ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தினங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.