ன்குணி, மேற்கு வங்கம்

சும்பாலில் தங்கம் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் அறிவித்ததை அடுத்து ஒரு இளைஞர் மாட்டுக்கு தங்கக் கடன் கோரி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புர்துவான் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், ”இந்தியப் பசுக்களின் பாலில் தங்கம் உள்ளது.  அதனால் பசும்பால் லேசான மஞ்சள் நிறத்தில் உள்ளது.  இந்தியப் பசுக்களின் முதுகில் வளைவுகள் உல்ளன.  ஆனால் வெளிநாட்டு பசுக்கள் நேரான முதுகுடன் உள்ளன.  இந்த வளைவுகளுக்குத் தங்க தமனி எனப்  பெயர்.

இந்த பாகத்தில் சூரிய ஒளி படும் போது தங்கம் உற்பத்தி ஆகிறது   அது பாலில் கலந்து விடுகிறது.  அதனால் பால் லேசான மஞ்சள் அல்லது தங்க நிறமாக உள்ளது.   இந்தப் பாலில் ஏராளமான எதிர்ப்புச் சக்தி உள்ளது.  ஒரு மனிதன் இந்த பாலை மட்டும் உட்கொண்டு உயிர் வாழமுடியும்.   வேறு எந்த உணவும் தேவைப்படாது.  பால் ஒரு பரிபூரண உணவு” எனத் தெரிவித்தார்.

இது மேற்கு வங்க மாநில கிராம மக்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.  அதற்கு ஏற்ப தன்குணி என்னும் ஊரில் உள்ள தங்க நகைக் கடன் வழங்கும் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ஒரு இளைஞர் இரு  பசுக்களுடன் வந்துள்ளார்.  அவர் பசும்பாலில் தங்கம் உள்ளதால் தனது மாடுகளை வைத்துக் கொண்டு தங்கக் கடன் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது மேற்கு வங்க செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

இது குறித்து கரகச்சா கிராம பஞ்சாயத்துத் தலைவர் மனோஜ் சிங், ”திலீப் கோஷ் தெரிவித்த கருத்துக்கு அவருக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும்.   பசும்பாலில் தங்கம் உள்ளது என ஒன்றை அவர் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்.  அவருடைய இந்த அறிவிப்பால் தினமும் பலர் பஞ்சாயத்து அலுவலகத்துக்குப் பசுக்களுடன் வந்து தங்கள் பசுக்கள் தினமும் 15-16 லிட்டர் பால் கறப்பதால் தங்கக் கடன் எவ்வளவு கிடைக்கும் என கேட்கின்றனர்.

இதை எல்லாம் கேட்டால் எனக்கு அவமானமாக உள்ளது.  ஒரு அரசியல் தலைவர் உணவு, உடை மற்றும் உறைவிடம் குறித்துப் பேசலாம்.  மக்களுடைய முன்னேற்றத்தைக் குறித்துப் பேசலாம்.  ஆனால் பாஜகவினர்  மதம் மற்றும் இந்துத்துவா பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் மக்கள் நிச்சயம் இவர்களுக்கு எதிரான முடிவை எடுப்பார்கள்” எனக் கூறி உள்ளார்.