மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்குக்கு காரணமான அதிகாரி சமீர் வான்கடேமீது நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.  ஆர்யன்கானை  சிக்க வைத்த போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சகத்துக்கு, மத்தியஅரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம், மும்பையில் இருந்து கோவா புறப்பட்டுச் சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன் படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில்,  மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக, 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். இணைய தளம் வாயிலாகச் சுற்றுலாப் பயண நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.  இந்த சொகுசு கப்பலில் இரவு போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதைதொடர்ந்து அதே கப்பலில்,  போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள்,  சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.  இந்த கப்பல் சுற்றுலாவில் நாடு முழுவதிலும் இருந்து பல கோடீஸ்வரர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மாடலிங் உலகைச் சேர்ந்தவர்கள் என 800 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

அந்த கபலில் இரவில் போதை விருந்து நடைபெற்றது. அப்போது, போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை மாறுவேடத்தில் இருந்த காவல் துறையினர் கண்டுபிடித்தனர். உடனே அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அந்த கொகுசு கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது   பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், “ஆர்யன் கான் பிடிபட்டதும், அவரை விடுவிக்க சமீர் வான்கடே 25கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு” எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன்கானுக்கும், போதைபொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.  “நடிகர் ஷாருக்கான் குறி வைக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வேறு அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதில், “ஆர்யன்கான் குற்றமற்றவர்” என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையில் நடந்த தவறுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் எஸ்.என். பிரதான் ஒப்புக்கொண்டதுடன்  சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அதிகாரி உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஆர்யன் கானை வேண்டும் என்றே சமீர் வான்கடே  போதைப் பொருள் வழக்கில் சிக்க வைத்ததாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்ததரக்குறைவான விசாரணைக்காக சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், மத்திய நிதியமைச்சகத்துக்கு மத்திய அரசு தற்போது அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக, “சமீர் வான்கடே ஐஆர்எஸ் அதிகாரி என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நிதியமைச்சகத்துக்கு இருப்பதாகவே” தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சமீர் வான்கடே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமீர் வான்கடே மராத்தி நடிகை கிராந்தி ரெட்கரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.