டில்லி:

‘‘லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாத அருண் ஜெட்லி என்னை விமர்சனம் செய்கிறார். கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்’’ என்று பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அருண் ஜெட்லி தற்போது நிதியமைச்சராக இருந்திருக்க முடியாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எனது நண்பர் இல்லை. ஆனால், அவர் ஜெட்லியின் நண்பர். ஜெட்லி எனது பின்னணி பற்றி மறந்துவிட்டார்.

அரசியலில் நுழைவதற்கு முன் பல தடைகளை சந்தித்துள்ளேன். ஐஏஎஸ் பணியை, பணி ஓய்வு பெறுவதற்கு 12 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டேன். அரசியலில் நுழைந்த பின், எனது தொகுதியை கண்டறிந்தேன். லோக்சபா தொகுதியை தேர்வு செய்ய எனக்கு 25 வருடங்கள் ஆகவில்லை. லோக்சபாவின் முகத்தை பார்த்திராதவர்கள் என்னை கேள்விகேட்கிறார்கள்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கறுப்பு பணம் பதுக்கிய 700 பேரின் விவரங்களை சுவிட்சர்லாந்தின் எச்எஸ்பிசி வங்கி இந்தியாவிடம் வழங்கியது. அவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்?. அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. கறுப்பு பணம் மற்றும் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். இது விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகியுள்ளார். ஆனால், இங்கு எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.