டில்லி:

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த 14ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது தூரத்து உறவினரான நடுத்தர வயதுடைய ஒரு பெண் சிறுநீரக தானம் செய்துள்ளார். உயிருடன் உள்ள உறவில்லாதவர் நன்கொடை பிரிவின் கீழ் சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் நண்பர்கள், உறவினர், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போன்றவர்கள் சிறுநீரக தானம் வழங்கலாம்.

இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி பெற்று நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே சிறுநீரகம் தானமாக பெற்று பொருத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.