கொல்கத்தா

மூத்த மாணவர்கள் பகடிவதையால் முதலாமாண்டு மாணவர் தற்கொலை சம்பவத்தில் கைதாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில், ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னாதிப் என்ற மாணவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.   இவர் பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த மூத்த மாணவர்களில் சிலர் ஸ்வப்னாதிப்பை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவர் கடந்த 9 ஆம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.

ஸ்வப்னாதிப் கடந்த 9 ஆம் தேதி காலை தனது தாயாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.  ‘நீங்கள் சீக்கிரம் வாருங்கள். உங்களிடம் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன’ என்று கூறியுள்ளார். இத்தகைய  சூழ்நிலையில்தான் அவர் அன்று இரவே விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து         உயிரிழந்திருக்கிறார்.

இது தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர் தீப்சேகர் தத்தா மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் மனோதோஷ் கோஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் சவுத்ரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினஎர் கைது செய்தனர். 2022ம் ஆண்டு கணிதத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த முன்னாள் மாணவர் சவுத்ரி சட்டவிரோதமாக விடுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.