டில்லி

பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான நவஜோத் சிங் சித்து கடுமையாக தாக்கி உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில அமைச்சராக உள்ளார். இன்று இவர் டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் உரையாற்றிய சித்து தனது உரையில் பிரதமர் மோடியை க்டுமையாக தாக்கி உள்ளார்.

நவஜோத் சிங் சித்து, “இந்தியாவில் முதல் முறையாக ஒரு விளம்பரத்தில் ஒரு பிரதமர் தோன்றி உள்ளார். ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடி தோன்றியது தான் அது.   பிரதமர் அம்பானிக்கும் அதானிக்கு வர்த்தக மேலாளரா? அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கும் போது தனியார் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன.

பாஜக அரசில் ஏழை மக்களிடம் மொத்தம் உள்ள பணத்தைப் போல் 50 மடங்கு இந்தியாவின் மிகப்பெரிய 9 செல்வந்தர்களிடம் உள்ளது. நாம் உணவில்லா 119 நாடுகளில் 103 ஆம் இடத்திலிருக்கிறோம். உலக நாடுகளில் நமது நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது.  இதுதான் பிரதமரின் தேசியவாதம் என தோன்றுகிறது.   இது குறித்து என்னுடன் விவாதிக்க பிரதமர் தயாரா?”  என கேள்வி எழுப்பினார்.