Aகட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் வாழும் தீவிர கோலி ரசிகர் ஒருவரின் செயல் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

31 வயதான பிந்து பெஹெரா என்ற பெயருடைய அந்த தீவிர விராத் கோலி ரசிகர், கோலியின் உருவத்தையும், அவரின் ஜெர்சி எண்ணையும் தனது உடம்பில் பச்சைக் குத்தியுள்ளார். மொத்தமாக இவர் தனது உடலில் 16 இடங்களில் பச்சைக் குத்தியுள்ளார்.

இவரை தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

அவர் கூறியதாவது, “நான் சிறுவயதிலிருந்தே தீவிர கிரிக்கெட் ரசிகன். கோலியின் ஆட்டத்திறன் மற்றும் பாணியால் ஈர்க்கப்பட்டு அவரின் தீவிர ரசிகனாகிவிட்டேன். அவரின் மீதான எனது மரியாதையை இப்படியாக வெளிக்காட்ட விரும்பினேன்.

கடந்த 2016ம் ஆண்டே பச்சைக் குத்த முடிவுசெய்தாலும், கையில் பணம் இல்லாத காரணத்தால், பணத்தை சேர்த்துக்கொண்டு பச்சைக் குத்தினேன். உள்நாட்டில் நடக்கும் விராத் கோலி பங்கேற்கும் போட்டிகளைப் பார்க்கச் செல்கிறேன்.

வெளிநாட்டுப் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பிருந்தால் அங்கும் செல்வேன். அக்டோபர் மாதம் நடந்த விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியின்போது, கோலியை சந்திக்கும் வாய்ப்பு முதன்முதலாக கிடைத்தது. அவர் அப்போது என்னை அணைத்துக் கொள்வார் என்று நான் ஒருபோதும் நி‍னைக்கவில்லை” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்கிறார் அந்த ரசிகர்.