அகர்தலா: திரிபுராவில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். இதுவரை 3 பாஜக எம்.எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாஜக எம்எல்ஏக்கள் கட்சி தலைமைமீதான அதிருப்தியால் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு கோஷ்டி மோதல் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மேமாதம், மாநலி முதல்வரும்,  மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப்  தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வராக மாணிக் ஷாகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மாநில பாஜக தலைமைமீதான அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பாஜக  எம்.எல்.ஏ க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸில் இணைந்த நிலையில் இன்று மூன்றாவதாக மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ பர்பா மோகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.