லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆண்டி முர்ரே மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் கலப்பு இணையராக ஆடவுள்ளனர்.

சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் களம் கண்டுள்ள ஆண்டி முர்ரே, செரினா வில்லியம்ஸ் உடன் இணைசேர்ந்து களம் காணும் முடிவை எடுத்துள்ளார்.

ஆண்டி முர்ரே இரண்டுமுறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றவர். அதேசமயம், செரினாவோ மொத்தம் 7 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவர். இவர்கள் இணை சேர்வதன் மூலம், விம்பிள்டன் பட்டத்தை வெல்வார்கள் என்றே நம்பப்படுகிறது.

ஆண்டி முர்ரே ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஃபிரான்ஸ் நாட்டின் பியரே ஹியூக்ஸ் ஹெர்பர்ட் உடன் இணை சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டி முர்ரேவின் திறமை மீது தனக்குப் பெரிய மரியாதையும் நம்பிக்கையும் உண்டு எனவும், அவருடன் இணை சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார் செரினா வில்லியம்ஸ்.