பாட்னா:

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் கடன்களை, தனது பணத்தால் அடைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும் நிலையில், இந்த ஆண்டு, பீகார் மாநிலத்தில் 2100 விவசாயிகளின் கடன்களை அடைத்து, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கி உள்ளார்.

நாடு முழுவதும்  பல்வேறு மாநிலங்களில்  பருவமழை பொய்த்து போனதால், பாசனத்திற்கு தண்ணீரின்றி  விவசாயிகள்,  தாங்கள்வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

இதன் காரணமாக, வாழ்விழக்கும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற நினைத்த சூப்பர் ஸ்டார், கடந்த சில ஆண்டுகளாக  பல விவசாயிகளின், விவசாய கடன்களை அடைத்து அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு உ.பி. மாநிலத்தை சேர்ந்த  சுமார் 850 விவசாயிகளின் கடன் தொகையான ரூ.5.5 கோடி அளவிலான பணத்தை செலுத்தி அந்த விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு 350 விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் தொகை  சுமார் 2 கோடி 50 லட்சம் ரூபாய் செலுத்தி அவர்களுக்கு வாழ்வளித்தார்.

இந்த நிலையில், தற்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன் தொகையை அடைத்து உள்ளார். ஆனால், அதற்கான தொகை எவ்வளவு என்பது தெரிவிக்கப்படவில்லை. அமிதாப்பின் நற்செயல் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.