புதுடெல்லி:

மெகா வங்கி மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, நீரவ் மோடியின் மனைவி அமி மோடி நியூயார்க்கில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


பல கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, அங்கு சுதந்திரமாக சுற்றித் திரிவதை டெலிகிராப் செய்தியாளர் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், நீரவ் மோடியின் மனைவி அமி மோடி மீதும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், பல்வேறு பண பரிவர்த்தனைகளின்படி நீரவ் மோடியின் மனைவி அமி மோடி நியூயார்க்கில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்துகள் வாங்கிப் போட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளது.

நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி ரூ.270 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, நீரவ் மோடி குடும்பத்தாரிடமிருந்து ரூ.2,500 கோடி அளவுக்கு சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.