டெல்லி: தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர்ஜவானில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. இரு இடங்களில் அணையா விளக்குகளை பராமரிப்பது கடினமாகி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலைநகர் வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா கேட் புல்வெளியில் அமர் ஜவான் ஜோதியில் எரிந்து வரும் அணையா விளக்கு இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு  ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா தலைமையில்  தேசிய போர் நினைவகத்தின் தீபத்துடன் ஜோதி இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தினத்திற்கு முன்னதாக இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய போர் நினைவகத்தின் தீபத்துடன் ஜோதி இணைக்கப்படுகிறது.

இரண்டு இடங்களில் ஜோதிகளை பராமரிப்பது கடினமாகி வருவதைக் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலைநகர வட்டாரங்கள் தெரிவித்தன. தேசிய போர் நினைவிடம் ஏற்கனவே நாட்டின் தியாகிகளுக்காக கட்டப்பட்டிருப்பதால், இந்தியா கேட் பகுதியில் ஏன் தனி சுடரை ஏற்ற வேண்டும் என்ற வாதமும் எழுந்துள்ளதாகவும், அதனால் ஒரே இடத்தில் ஜோதி எரியும் வகையில், தேசிய போர் நினைவிடத்தோடு இணைக்கப்படுவதாகவும்,  இந்தியா கேட் மீது பொறிக்கப்பட்டுள்ள தியாகிகளின் பெயர்களும் தேசிய போர் நினைவிடத்திலும் பொறிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

1947-48 பாகிஸ்தானுடனான போரில் இருந்து கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடனான மோதல் வரை — பல்வேறு நடவடிக்கைகளில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களும் தேசிய போர் நினைவகத்தில் உள்ளது.

அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படாது. அது, டெல்ல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில எரிந்து வரும் அணையா விளக்குடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  1971ஆம் ஆண்டு நடந்த போரில் உயிர் நீத்த போர் வீரர்களின்  நினைவாக இந்த அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் நாளில் இங்கு வீர வணக்கம் செலுத்தப்படும்.

ஆனால், இங்கு 1971ஆம் ஆண்டு போரின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களோ அல்லது அதன்பிறகு நடந்த வேறு எந்த போர்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களோ இடம்பெறவில்லை அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தும் போது, அங்கு எந்த போர் வீரர்களின் பெயரும் இடம்பெற்றிருக்காது. ஆனால், தற்போது போர் நினைவிடத்தில் இந்த அணையா விளக்கை இணைக்கும் போது, இங்கு 1971ஆம் அண்டு போர் மற்றும் அதற்கு முந்தைய, அதற்குப் பிந்தைய போர்களில் உயிர் நீத்த போர் வீரர்களின் பெயர்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கும். எனவே, தேசிய போர் நினைவிடத்தில், தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதுதான், உண்மையான கதாநாயாகர்களை கௌரவப்படுத்துவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில், டெல்லியில்  தேசிய போர் நினைவிடம், மோடி தலைமையிலான பாஜக அரசு உருவாக்கியது. இது கடந்த 2019ம் ஆண்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமர் ஜவான் ஜோதியை இடமாற்றும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.