கொச்சி:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லியில் தன் தாய் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை வெளிப்படுத்தாமல், அவருடைய சடலத்தை இறுதி சடங்கிற்காக கேரளாவிற்கு கொண்டு வந்ததால் மாநிலங்களவை எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக சேவகரான ஜோமன் புதன்புறக்கள் இதனை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரது தாயார் உயிரிழந்தார் என்று அல்போன்ஸ் கண்ணன்தனம் ஒரு வீடியோவில் வெளிப்படுத்தியதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அதனை தொடர்ந்து இது பெரிதாக வெடித்தது.
அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் தந் தாயார் அவருடன் டெல்லியில் வசித்து வந்ததாகவும், ஜூன் 10-ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகவும் அவரது உடல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கிற்கு வைக்கப்பட்டது. இறுதி சடங்கிற்கு மரியாதை செலுத்துவதற்காக பல பொதுமக்கள் கலந்து கொண்டனர், அதில் ஜோமன் புதன்புறக்களும் கலந்து கொண்டுள்ளார். இதனை ஜோமன் புதன்புறக்கள் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுமக்கள் இறுதி சடங்கில் கலந்துகொண்ட அந்த நேரத்தில் தன் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் வெளியிடவில்லை என்று சோமன் புதன்புறக்கள் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினர்கள் கடுமையான விதிமுறைகளை  கடைப்பிடிக்க வேண்டுமென்று அரசு தெரிவித்துள்ள போதிலும் அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் அதனை வெளிப்படுத்தாமல் டெல்லியிலிருந்து கேரளாவிற்கு தன் தாயாரின் உடலை விமானத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது மிகவும் அபத்தமான ஒரு செயல் என்று ஜோமன் குற்றம்சாட்டியுள்ளார்.