அலகாபாத்: வாரணாசி மக்களவைத் தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இந்த மனுவை விசாரிக்க தேதி குறித்துள்ளார் நீதிபதி எம்.கே.குப்தா.

இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ். வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி சார்பாக போட்டியிட மனுதாக்கல் செய்த அவரின் மனு, தேர்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எல்லைப் பாதுகாப்பு படையிலிருந்து அவர் ஊழல் அல்லது விசுவாசமின்மை ஆகிய காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்படவில்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க தவறியதற்காகவே வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.

எனவே, தனது வேட்புமனுவை தள்ளுபடி செய்தது தவறானது என்றும், வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார் தேஜ் பகதூர் யாதவ்.