அலகாபாத்: ஞானவாபி மசூதியில் நடைபெற்றுவரும் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும் 18-ம் தேதிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.இந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.  . இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.

இதையடுத்து, மசூதியின் வளாகத்தில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, மசூதி சார்பில் வாரணாசி உயர்நீதிமன்றத்தில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தலாம் என  கடந்த ஜூலை  21ம் தேதி  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  இதையடுத்து பலத்த பாதுகாப்புடன்  ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வுமேற்கொண்டனர்.  தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கான காலக் கெடு, கடந்த 2-ம் தேதி முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் அக்டோபர் 6-ம் தேதி ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வுக்குத் தடை கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி, சன்னி வக்பு வாரியம் ஆகியவை தாக்கல் செய்த மனு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி! மீண்டும் உறுதி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்…