அலகாபாத்

கும்ப மேளாவில் நதியில் குளிக்கும் பெண்களின் புகைப்படத்தை வெளியிட அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் முழுகுவதால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். அது மட்டுமின்றி இந்த இடத்தில் நீத்தார் கடன்களை செய்வதால் அவர்கள் முக்தி அடைவார்கள் எனவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

தற்போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெறுகிறது.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் இந்த விழா சென்ற மாதம் 15 ஆம் தேதி முதல் வரும் மார்ச் வரை நடைபெறுகிறது.   இந்த கும்ப மேளாவின் போது கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கல் குவிகின்றனர்.

இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஆண்களும் பெண்களுமாக லட்சக்கணக்கானோர் நதியில் புனித நீராடி வருகின்றனர். இந்த புனித நீராடலை பலர் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு பொது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அச்சு ஊடகங்களிலும் சமூக வலதளங்களிலும் வெளியிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது குறித்து பொது நல வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கில், “பெண்கள் கும்ப மேளா பகுதியில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பத்திரிகை அல்லது சமூக வலை தளங்களில் வெளியிடக் கூடாது. மீறி யாராவது பதிந்தால் அவர் மீது நீதிமன்ற ந்டவடிக்கை எடுக்கப்படும்” என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் கும்ப மேலா பகுதியில் நீராடுவதை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதையே தடை செய்திருக்கலாம் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.