கொழும்பு: இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொருளாதார சிக்கலில் சிக்கி தடுமாறும் இலங்கைக்கு இந்திய அரசு உதவி வருகிறது. மேலும், தமிழகஅரசும் நேற்று ஒரு கப்பல்மூலம் உணவுப் பொருட்கள், மருந்துபொருட்கள் என ஏராளமான உதவிகளை அனுப்பி உள்ளது. அங்கு விலைவாசிகள் கடுமையாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் வாழ வழியின்றி இந்தியா உள்பட அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் உள்ள இந்திய மாணவர்கள், வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் தனித்தனியே இணையத்தில் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளதுடன், அதற்கான இணையதள முகவரியையும்  இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது மேலும், கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.