டெல்லி: தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் தவிர மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிங்களிலும் வாக்குப்பதிவுக்கான நாட்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தாலும் தேர்தலை சுமுகமாக நடத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு அதிகம் தேவை.

தேர்தல் பணியில் ஈடுபட கூடிய ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தலை வணங்குகிறேன். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பு முறை ஒரு வாய்ப்பாக வழங்கப்படுகிறது.

5 பேர் மட்டுமே வேட்பாளருடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்படுகிறது. 5 வாகனங்களுக்கு மேல் பிரச்சாரத்துக்கு அனுமதி இல்லை. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.