சென்னை: மூன்றாவது முறையாக  மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் ரயில் ஓட்டுனருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

18வது மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழா நாளை (ஜூன் 9ந்தேதி) மாலை 6 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அண்டை நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும்,  அரசியல் கட்சித் தலைவர்கள், விளை யாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுகப்ப்பட்டுள்ளது.

அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்f;s. துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகள் . வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில்வே ஊழியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் மாளிகையில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க  பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  இவர் வந்தே பாரத் அதிவேக ரயிலை இயக்கி வருகிறார். மேலும், மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் ஆசியாவின் முதல் லோகோ பைலட் சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல்) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டப்பட்டுள்ளது. சென்னை – விஜயவாடா, சென்னை – கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே ஐஸ்வர்யா மேனன் வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு ஐஸ்வர்யா மேனன் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது தெற்கு ரயில்வேக்கு கிடைத்த பெருமிதம் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.