சென்னை: ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு,  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக  600 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு பவுர்ணமியன்றும்  அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை பக்தர்கள் கிரி வலம் வருவது வழக்கம்.  இந்த நிலையில்,  ஐப்பசி மாத பௌர்ணமி நாளை (சனிக்கிழமைஸ்ரீ அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இது பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு ல் கிரிவலம் செல்ல வருவார்கள். இதன் காரணமாக, பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்,  நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “(சனிக்கிழமை) மற்றும் 29/10/2023 (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு 27/10/2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/10/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 28/10/2023 அன்று திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் ஞாயிறு அன்று மட்டும் 10,874 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொண்டுள்ளது”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.