டில்லி

மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு இடத்தை ரத்து செய்யும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு மேலாண்மை செய்து வருகிறது.   பல மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியில் சேர்ந்து அதன்பிறகு இடத்தை ரத்து செய்கின்றனர்.   இவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் திருப்பி அளிக்கப்படுவதில்லை.

இதையொட்டி குழு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் காணப்படுவதாவது :

“கொரோனா தாக்கம் நாடெங்கும் உள்ளதால் தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஒரு சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.  அனைத்து மாநில அரசுகளும் இதன்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இடத்தை ரத்து செய்யக் கடைசி தேதி நவம்பர் 10 ஆக இருந்தது 30 நவம்பர் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த இடங்களில் புதிய மாணவர் சேர்க்கைக்கான இறுதி தேதி 15 நவம்பர் என இருந்தது டிசம்பர் 5 என மாற்றப்பட்டுள்ளது.   இரண்டாம் ஆண்டு கல்விக்கு நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி நவம்பர் 1 லிருந்து டிசம்பர் 1 ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இடத்தை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்தியுள்ள அனைத்து கட்டணங்களும் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.   இதற்கான செய்முறை கட்டணமாக அதிகபட்சமாக ரூ.1000 பிடித்தம் செய்யலாம்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.