கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான மால்னுபிரவிர் மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 ஜெனரிக்-மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றுள்ள இந்த ஆன்டிவைரல் மாத்திரை அமெரிக்காவில் இறப்பு விகிதத்தை சுமார் 30 சதவீதம் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா.-வின் ஆதரவில் செய்யப்பெற்று வரும் மருந்துகள் காப்புரிமைக் குழு (MPP) மெர்க் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எட்டு இந்திய நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமையை வழங்க கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்தது.

இந்த மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டி தற்போது இந்தியா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளைச் சேர்ந்த 27 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து உற்பத்தியை விரிவுபடுத்தியிருக்கிறது.

கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இந்த மால்னுபிரவிர் மாத்திரை மொத்தம் 5 நாட்கள் 40 மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும், இந்த சிகிச்சைக்கு மொத்தம் சுமார் 1500 ரூபாய் மாத்திரைக்கு செலவாகும் என்று கூறப்படுகிறது.

உலகில் ஏழ்மையான வளர்ச்சியில் பின்தங்கிய 105 நாடுகளில் இந்த மாத்திரையை ராயல்டி இல்லாமல் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக மருந்துகள் காப்புரிமைக் குழுவின் (MPP) செய்தி தொடர்பாளர் கூறியயிருக்கிறார்.

இந்தியாவில் இந்த மாத்திரையை தயாரிக்க ஏற்கனவே ஆப்டிமஸ் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, சன் ஃபார்மா உள்ளிட்ட 13 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.