டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும கொரோனா 3 ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது.  தலைநகர் டெல்லியில் பரவல் வேகம் மிக அதிகமாக இருக்கிறது.  உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 150 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,  கடந்த மாதம் முதலே உச்சநீதிமன்றம் முழுமையாக காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு மாறியது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்கு  10 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஆளாகி உள்ளனர். அவர்களில் 2 பேர் குணமடைந்த நிலையில், மீதமுள்ள 8 பேர் தற்போது தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள், உதவியாளர் கள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், விசாரணைகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.