கெய்ரோ
கடந்த மார்ச் மாதம் 6 நாட்கள் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் உரிமையாளருடன் எகிப்து அரசு ஒப்பந்தம் இட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் மூலம் கப்பல் போக்குவரத்து மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் கப்பல்கள் சுற்றுக் கொண்டு போகத் தேவை இல்லை என்பதால் எரிபொருள் மற்றும் நேரம் வெகுவாக மிச்சமாகிறது. சூயஸ் கால்வாயில் சராசரியாக தினசரி சுமார் ௧௦௦௦ கோடி மதிப்புள்ள சரக்குகல் கப்பல் வழியாக எடுத்து செல்லப்படுகின்றன.
இந்நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் 2.2 லட்சம் டன் எடையுள்ள சரக்கு கப்பலான எவர்கிரீன் கப்பல் கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது. இதனால் இரு பக்கமும் வேறெந்த கப்பலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 6 நாட்கள் கடுமையான மீட்புப் பணிகளுக்குப் பிறகு அந்த கப்பல் நகர வைக்கப்பட்டது. இது குறித்து தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கப்பலின் உரிமையாளரிடம் எகிப்து அரசு இந்த கப்பல் மீட்க மற்றும் இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இழப்பீடு கோரி ஒரு ஒப்பந்தம் இட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. முதலில் எகிப்து அரசு இழப்பீடாக 91.6 கோடி டாலர்கள் கேட்டுள்ளது. இது கால்வாய் மூடியதால் ஏற்பட்ட இழப்பு, மீட்புப் பணி மற்றும் கால்வாயில் ஏற்பட்ட சேதம் ஆகியவற்றுக்காக் கோரப்பட்டுள்ளது.
ஆனால் கப்பலின் உரிமையாளர் மற்றும் அதன் காப்பீடு நிறுவனத்தினர் முதலில் 15 கோடி டாலர்கள் தருவதாகக் கூறி உள்ளனர். பிறகு இரு தரப்பினருக்கும் பேரம் நடந்து 55 கோடி டாலர் ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.