ர்சந்த்பூர்

மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலியாகி உள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  வன்முறை மற்றும் மோதலை தடுக்க மணிப்பூரில் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் குக்கி மற்றும் மெய்தி சமூகங்களில் உள்ள ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து தாக்குதல், வன்முறைச் சம்பவங்களை நடத்தி வருகின்றன.

அம்மாநிலத்தின் சர்சந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்  சிம்லால்பால் தடைசெய்யப்பட்ட குக்கி ஆயுதக்குழுவினருடன் இணைந்து செயல்பட்டது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலானது. எனவே, தலைமைக் காவலர் சிம்லால்பாலை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

தலைமைக் காவலர் சிம்லால்பால் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அவருக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்தி குக்கி சமூகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சர்சந்த்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்., பதற்றம் அதிகரித்த நிலையில் காவல்துறையினர் மற்றும் அசாம் ராஷ்டிரிய ரைபில் படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சர்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.