டில்லி

ரும் மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா  பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.   இதில் முதல் கட்டமாக ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.  அதன் பிறகு இரண்டாம் கட்டமாக மார்ச் 1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இது ஏப்ரல் 1 முதல் மீண்டும் நீட்டிக்கப்பட்டு 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்டமாக 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   ஏற்கனவே இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லாத நிலையில் இந்த மூன்றாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதன் உற்பத்தி மற்றும் விநியோகம் இதுவரை தொடங்கப்படவில்லை. 

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள், “இந்தியா மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.   இதனால் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மிக அதிக அளவில் தேவைப்படும்.   அதே வேளையில் இந்த மருந்து நிறுவனங்களால் அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியுமா என்பது மிகவும் சந்தேகம் ஆகும்.  எனவே மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளனர்.