கொல்கத்தா:

அனுமதியின்றி நடத்தப்பட்ட பாஜக வெற்றி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸாரும் பாஜக தொண்டர்களும் காயமடைந்தனர்.


மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் புனியாத்பூர் மற்றும் காங்காரம்பூரில் தடையை மீறி பாஜகவின் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலத்துக்கு பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் தலைமை தாங்கினார். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெண் தொண்டர் ஒருவருக்கு கால் ஒடிந்தது.

பதற்றம் அதிகரித்ததால், திலிப் கோஷை பாஜகவினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நிலைமையை கட்டுப்படுத்த கூடுதலாக போலீஸ் படை குவிக்கப்பட்டது.

போலீஸார் நடத்திய தடியடியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த மோதலின்போது ஏராளமான போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து போலீஸார் இந்த தாக்குதலை நடத்தியதாக திலிப் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெற்றி ஊர்வலத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்ததையடுத்து, போலீஸார் 144 தடையுத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.