டில்லி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு முழுநேரத் தலைவராக எஸ் கே ஹல்தர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைத்தது. இவ்விரு அமைப்புகளிலும் 4 மாநிலங்கள் தரப்பில் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆணைய கூட்டத்தின் போது அணை மற்றும் நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளையும், அதே போன்று ஒழுங்காற்று குழுக் கூட்டத்தின் போது அணை பாதுகாப்பு நிலவரங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரப்படுகிறது. முதன் முதலாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மசூத் உசேன் முழு நேரத் தலைவராக நியமிக்கப்பட்டார், மசூத் ஓய்வு பெற்ற பிறகு, மத்திய நீர்வளத் துறையின் தலைவராக இருந்தவர்களே காவிரி ஆணையத்தின் தலைவராக இருந்து வந்தனர்.

அதாவது அருண் குமார் சின்காவில் தொடங்கி, நேற்று முன்தினம் ஆணைய கூட்டம் நடத்திய எஸ்.கே.ஹல்தர் வரையில், அனைவருமே இடைக்காலத் தலைவராக மட்டுமே நீடித்து வந்தனர்.   ஆகவே ‘காவிரி ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான், மேகதாது உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் அதிகாரமிக்க உத்தரவைப் பிறப்பிக்க முடியும்,’ எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

சுமார் மூன்று ஆண்டு இழுபறிக்குப் பிறகு நேற்று மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக இருக்கும் சாமித்ரா குமார் ஹல்தர் (எஸ்.கே.ஹல்தர்), காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட முழு நேரத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டுகள். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளையும் இவர் கண்காணிப்பார்,’ எனக் கூறப்பட்டுள்ளது.