பெங்களூரு:  சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1  விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது.  இந்த விண்கலம், ஒரு நாளைக்கு 1,440 படங்களை தரையில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு தளத்துக்கு அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.    ஏற்கனவே நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ள இஸ்ரோவின் மகுடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் மேலும் ஒரு வைரக்கலை பதித்துள்ளது.

சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக  சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த விண்கலமான  பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து  இன்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

ஆதித்யா எல் 1 மிஷன் சிறப்பம்சங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் அடுத்த பெரிய திட்டமான ஆதித்யா-எல் 1 மிஷன், சூரியனின் இயக்கவியல் மற்றும் விண்வெளி வானிலை பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் சோலார் மிஷன் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்ரோ தனது முதல் சூரியப் பயணத்தை செப்டம்பர் 2, சனிக்கிழமை தொடங்குவதற்கான தேதியை நிர்ணயித்துள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி, ஆதித்யா-எல்1 மிஷன் சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு  இந்திய சோலார் மிஷன் ஆகும். இது சூரியன்-பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்படும்.

இந்த விண்கலம் ஏவுவதற்கான  24  மணி நேர கவுன்ட்டவுன்  நேற்று (செப்டம்பர் 1ந்தேதி)  பகல் 12.10 மணிக்கு தொடங்கியது இதையடுத்து வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம். செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பயணித்து இலக்கை அடைய உள்ளது.

ஆதித்யா-எல்1 பூமியிலிருந்து தோராயமாக 1.5 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும், இது சூரியனை நோக்கிச் செல்லும், இது பூமி-சூரியன் தூரத்தில் 1% ஆகும்.

சூரியன் ஒரு மாபெரும் வாயுக் கோளமாகும், மேலும் ஆதித்யா-எல்1 சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தைப் படிக்கும்.

ஆதித்யா-எல்1 சூரியனில் இறங்காது அல்லது சூரியனை நெருங்காது.

இந்த விண்கலத்தில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.  இவைகளைக் கொண்டு சூரியனை ஆய்வு செய்யப்படும்.

ஆதித்யா எல்1-ன் முதன்மை பேலோடான விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC),  அதன் சுற்றுப்பாதையில் இருந்து  ஒரு நாளைக்கு 1,440 படங்களை தரை நிலையத்திற்கு அனுப்பும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. மேலும்,  . VELC, ஆதித்யா-L1 இல் “பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான” பேலோட், ஹோஸ்கோட்டில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் (IIA) CREST (அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம்) வளாகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டது என்றும்   இஸ்ரோ  அறிவித்து உள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளன.  கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய  பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா இணைய உள்ளது.

ஆனால், மற்ற நாடுகளை காட்டிலும் மிகக் குறைந்த செலவிலேயே ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.