சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்து  உள்ளது.

நடிகர் விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தெரிவித்தது. நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக  ரூ.30,23,609 செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை மீண்டும் விஜய்க்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையின்போது எடுத்து வைத்த வாதத்தில்,  கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

தீர்ப்பில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது என்றும்,  2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.