சென்னை: கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் (Pallikaranai marsh) சென்னையில் பள்ளிக்கரணையில் இருக்கும் ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளது.  சென்னையின் ஒரு பகுதியான தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைந்துள்ளது.
இது முதலில் இருந்த அளவிற்கு பத்தில் ஒரு பகுதிதான் என்பது வருத்தத்திற்கு உரியது. இந்த நிகழ்வு சுமார் 30-40 ஆண்டுகளுக்குள் நடந்த ஒன்றுதான். தற்போது இயற்கையாளர்களின் தொடர் போராட்டத்துக்குப் பின், 2007இல் அரசு எஞ்சியுள்ள நீர்நிலையை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என்று அறிவித்தது.  பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது.
இது இந்திய அரசால் 1985-86-ல் செயல்படுத்தப்பட்ட தேசிய சதுப்புநில பாதுக்காப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 94 சதுப்புநிலங்களில் ஒன்று, மேலும் தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் ஒன்று. தமிழகத்தின் மற்ற இரண்டு சதுப்புநிலங்கள் கோடியக்கரை வனஉயிரின உய்விடம் மற்றும் கழுவெளி சதுப்பு நிலம் ஆகியனவாகும்.
ள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று  அரசால் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை இரு பக்கமும் வைக்கப்பட்டு உள்ளதே, அங்கு  பறவை வேட்டையைத் தடுக்க எந்த வனக் காவலர்களையும் அரசு நியமிக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
1965-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 38% சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது என்று தமிழக அரசு  2024ம் ஆண்டு ஜனவரியில், தேசிய பசுமை  தீர்பாயத்திடம் கூறியிருந்தது. இந்த ஆக்கிரமிக்கப்பட்ட  இடங்களில், . கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் வசம் 173.56 ஹெக்டேர், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ரயில்வே முறையே 163.25 ஹெக்டேர் மற்றும் 46.92 ஹெக்டேர்களை ஆக்கிரமித்துள்ளன. ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஈரநிலத்தில் 5.85 ஹெக்டேர் பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று  கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராம்சார் சதுப்பு நிலப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு வரும் சென்னைபள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், சாலை அமைக்கப்பட்டு வருவது குறித்தும், இதற்காக அங்குள்ள சதுப்பு நில நீர்நிலைகளில் டன் கணக்கில் கட்டுமானப் பொருள்கள் கொட்டப்பட்டு வருவது குறித்தும் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, சதுப்பு நிலத்தில் தனியார் நிறுவனம் சாலைஅமைத்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி சதுப்பு நில ஆணையம் நடத்திய ஆய்வில் தனியார் கட்டுமான நிறுவனம் பட்டா நிலத்தில் உள்ள தங்களது கட்டுமானத்துக்காக சதுப்பு நிலப் பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைத்து வருவது கண்டறியப்பட்டது.

அதையடுத்து, தென்மண்டல தீர்ப்பாயம், தனியார் கட்டுமானநிறுவனம் தனது கட்டுமானங்களை பட்டா நிலத்தில் மேற்கொண்டாலும், சதுப்பு நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கும் முன்பாக சிஎம்டிஏ, சதுப்பு நில ஆணையத்திடம் ஆலோசித்து இருக்க வேண்டும்.

சதுப்பு நிலத்தில் சாலை அமைப்பது என்பது சட்டவிரோதமானது மட்டுமி்ன்றி, சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுதொடர்பாக சிஎம்டிஏ நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு  மீண்டும் தென்மண்ட தீர்ப்பாயம்  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவி்ல், ‘‘கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைதற்போதைய சதுப்பு நிலப்பரப்புடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.