பத்திரிக்கைத் துறை ஜனநாயத்தின் நாண்காம் தூன் என நம்பப்படுகின்றது. ஆனால், இன்றைய “வியாபார” உலகில், அரசிடமிருந்து கிடைக்கும் விளம்பர வருவாய், மற்றும் அன்பளிப்பு கவர்களுக்கடிமையாகி, பெரும்பாலான ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகச் செயல்படுகின்றன. தற்போது வட இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் பாஜக-வின் ஊழல், தேசத்துரோக நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், மதவெறி பேச்சுக்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள்குறித்து வாய் திறப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகள் என்று இல்லாமல், வளர்ந்த நாடான ரஷ்யாவிலும் இதே நிலைமை தான். ரஷ்யாவின் ஊடகத்துறையை அரசு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

கடந்த அக்டோபர் மாதம், ரஷ்ய அரசு செலவில் நடத்தப் பட்ட ஊடகம்குறித்த ஆய்வில், பெரும்பாலான ரஷ்யர்கள் தேசிய ஊடகங்கள்மீது நம்பிக்கையில்லையென கருத்து தெரிவித்துள்ளனர். இம்மாத துவக்கத்தில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், மிகக் குறைந்த அளவிலான ரஷ்யர்களே தங்கள் தேசிய ஊடகங்கள் நடுநிலையாகச் செயல்படுவதாக கூறியுள்ளனர். பாதிப்பேர் மிகவும் அரிதாகத் தான் ரஷ்ய அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் செய்திகள் காண்பிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய மக்கள், அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்புவதாகவும், அஹ்டனால் தான் தேசிய ஊடகங்களையும், அரசினைய்ம் நம்புவதில்லையெனக் கருதிய அரசு, தேசியச் செய்திகள்குறித்த மக்களின் அவநம்பிக்கையை போக்கும் விதமாகவும், போலிச் செய்திகளை மறுக்கும் விதமாகவும், ரஷிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் “போலி செய்திகள்” எனும் வலைபக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமது அரசினைப் பற்றி அமெரிக்க ஊடங்கங்கள் வெளியிடும் உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை அந்த வலைத்தளத்தில் “போலிச் செய்தி” என்ற முத்திரையுடன் வெளியிட்டு, “ இந்தச் செய்தியில் தகவல் உள்ளது. ஆனால் தகவலில் துளியும் உண்மை இல்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆனால், செய்தியில் எந்தப் பகுதி போலி என்பதை மக்களுக்கு விளக்கும்படியான எந்தத் தகவலும் இல்லை) அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சகாரோவா புதன்கிழமை அரசுச் செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.விற்கு அளித்த பேட்டியில், “ இந்தப் பக்கத்தில் ரஷ்ய அரசுக்கு எதிரான பிரச்சாரமாய் வெளிநாட்டு ஊடகங்களால் விசமத்துடன் வெளியிடப்படும் போலி செய்திகளைத் தொடர்ந்து இங்கு அம்பலப்படுத்துவோம். ” என்றார்.

தற்போது இந்தப் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸ், ப்ளூம்பெர்க், என்பிசி, பிரித்தானியாவின் டெய்லி டெலிகிராப் மற்றும் அமெரிக்காவின் உள்ளூர் சாண்டா மோனிகா அப்சர்வர் ஆகியவற்றில் வெளிவந்த பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.
பத்திரிக்கை தர்மப்படி, செய்தி தரும் நபரின் ரகசியம் காக்கும்பொருட்டு, அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், செய்திகளில் “நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன… பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி தெரிவித்தார் எனக் குறிப்பிடுவோம். இது போன்றச் செய்திகளைத் தான் ரஷ்ய அரசு “போலிச் செய்திகள்” என இந்த வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றது.