சென்னை: அயல்நாட்டில்  வாழும் தமிழர்களை வெளிநாட்டில் வேலை செய்பவர்களாகப் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாகப் பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘அயலகத் தமிழர் நாள்’ விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆற்றினார். அவர் பேசியதாவது,

”உலகமெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் தமிழ் வணக்கம். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் நான் பெருமை அடைகிறேன்.

‘தமிழால் இணைவோம்’ என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாயங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழால் இணைவோம் என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால் ’தமிழன்’ என்ற உணர்வோடு நாம் கூடியிருக் கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கின்றன; நிலங்கள் பிரிக்கின்றன; ஆனாலும் மொழி இணைக்கின்றது. அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு.

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பதைத் தமிழ் மண்ணில் விதைத்து மொழிப்பற்றும் ,’தமிழா இன உணர்வு கொள்’ என்று முழங்கி இனமான உணர்வும் ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம். மொழிக்காகப் போராடிய, வாதாடிய இயக்கம் மட்டுமல்ல; மொழி காக்க தனது தேகத்தைத் தீக்குத் தின்னத் தந்த தீரர்களின் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் அது இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் அனைத்து மக்களின் அரசாக திமுக அரசு செயல்பட்டுவருகிறது. உங்களில் பலருக்கும் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு அரசும் நமது அரசு என்று சொல்லிக் கொள்ளும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு.

அதனால்தான் கழக அரசு அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் அயலகம் வாழ் தமிழர்கள் நலன் காக்கக்கூடிய ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டேன். நம்முடைய இனம் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல.

உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம்தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கின்றனர்.

வெளிநாடுகளுக்குச் சென்ற பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்துவருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய் வீடு. உங்களை அயலகத்துக்கு வாழப் போனவர்களாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாக அயல்நாடுகளில் இருப்பவர்களாக நினைத்து போற்றக் கடமைப்பட்டுள்ளேன்.

இத்தகைய அயலகத் தமிழர் மேன்மைக்காகத் தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர்தான் கருணாநிதி. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது. ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நமது அரசு ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். அரசு, புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.

ஐந்து கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நல நிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதனச் செலவினமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய், தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள், நிர்வாகச் செலவினங்களுக்காக மூன்று கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தேன்.

வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும். தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும். தமிழர்கள் புலம்பெயரும்போது, பயணப் புத்தாக்கப் பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.

ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி, வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும். சட்ட உதவி மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு திரும்பியவர்களுக்குக் குறுந்தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்துதரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை அரசு, தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.

தமிழர்கள், ‘எனது கிராமம்’ திட்டத்தின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு நன்மைகள் செய்து தரலாம். தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளைச் செய்தேன். இவை அனைத்துக்கும் சேர்த்து 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டை நோக்கிவந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கரோனா என்ற பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த விழாவை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்திருப்போம். கரோனா என்பதால் அது இயலவில்லை, ஆனால் காணொலியில் பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை, தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவர்களை அழைத்துவந்து கீழடியை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள். இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போலவே அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும்.

தமிழர் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய, தமிழ் கற்பிக்க, ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் செய்யும்.

தமிழால் இணைவோம்…! தமிழை வளர்ப்போம்…! தமிழரை வளர்ப்போம்…!

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்!”

இவ்வாறு பேசினார்.