டில்லி,

நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் கொண்டு வர மத்திய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும்உள்ள  அங்கன்வாடிகளில் பயிலும் மற்றும் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி  நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

நாடு முழுவதும் ரேஷன் பொருட்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவிலும் கை வைக்க முயற்சி செய்து வருகிறது.

அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் வேண்டும் என்று கூறி உள்ள மத்திய அரசு தற்போது சத்துணவிலும் கை வைத்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார், இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்,

அதில், ஏழை எளிய மக்கள் மற்றும் சாமானியர்களின் குழந்தைகள் படித்து வரும் அங்கன்வாடிகளில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற திட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது. விரைவில் இதுதொடர்பான புதிய ஆணை வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆதார் அட்டை வழங்கப்படும் வரை பிற அடையாள அட்டைகளை காட்டி குழந்தைகள் சத்துணவு மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும்,  சத்துணவில் நடைபெறும் முறைகேடுகளையும், போலி பதிவுகளையும் கண்டறியவே இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறி உள்ளார்.