டெல்லி:

பணமதிப்பிறக்க அறிவிப்பால் சிறு, குறு, நுண் தொழிற்சாலைகளில் 35 வேலை இழப்பு, 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பு (ஏஐஎம்ஓ) சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு சிறு, குறு, நுண் தொழில் நிறுவனங்களில் 35 சதவீத வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. முதல் 34 நாட்களில் 50 சதவீத வருவாய் குறைந்தது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மார்ச் மாதத்துக்குள் வேலை வாய்ப்பு குறைவு 60 சதவீதமாகவும், வருவாய் இழப்பு 55 சதவீதமாகவும் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் ஏற்க மறுத்து வருகிறது.
இந்த அமைப்பின் தலைவர் ரகுநாதன் கூறுகையில், கடந்த நவம்பர் 12, 25 மற்றும் டிசம்பர் 12ம் தேதி என குறிப்பிட்ட கால இடைவேளையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மத்திய வர்த்தகம் மற்றும் நிதிமையச்சகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அமைச்சகங்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. இந்த அறிக்கை முற்றிலும் மத்திய அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது. இந்த அவசர சூழ்நிலையை மத்திய அரசு கண்மூடிதனமாக எதிர்கொள்கிறது.

மகாராஷ்டிராவும், தமிழகமும் அதிக அளவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநில பாதிப்புகளும் புறம்தள்ளப்படுகிறது. பணமதிப்பிறக்கத்தை ஆதரிக்க வேண்டிய ஸ்திர தன்மை இல்லாத அரசு இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டின் மொத்த உற்பத்தி குறித்த நிலையை மத்திய புள்ளியியல் துறை மிகைப்படுத்தி காட்டுகிறது. கடந்த ஆண்டு 7.6 சதவீத வளர்ச்சி இருந்ததாகவும், இந்த ஆண்டு தற்போது 7.1 சதவீத வளர்ச்சி என்றும் வெளியிடப்படுகிறது. ஆனால் உண்மையான நிலை 6.8 சதவீதம் என்று ஐசிஆர்ஏ.வும், 6.9 சதவீதம் என்றும் கிரிசில் தெரிவித்துள்ளது
அக்டோபர் மாதம் உள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு நாட்டின் மொத்த உற்பத்தி கணக்கை வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ள நியூயார்க் டைம்ஸ், எவ்வளவு வளர்ச்சி என்பதை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.