சென்னை

டிசாவில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பு ஏற்பது யார் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா  வினா எழுப்பி உள்ளார்.

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா  கலந்துக் கொண்டார்.

அப்போது அவர்,  ”சுமார் 200க்கும் அதிகமானோர் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா மாநில முதல்வரைத் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தார். தற்போது சென்னைக்கு வரவேண்டியவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவிர தென்மண்டல ரெயில்வே கன்ட்ரோல் அறையுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதல்வர் இந்தியத் துணைக் கண்டத்தை உலுக்கிய விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உடல்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளைத் தமிழக அரசு சார்பில் மேற்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தை திமுகவோ, முதல்வர் மு.க.ஸ்டாலினோ அரசியல்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியாவின் பழைய வரலாற்றில் இதுபோன்ற விபத்துகளின்போது அந்தந்த அமைச்சர்கள் பொறுப் பேற்றிருக்கிறார்கள். லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவர்.

மம்தா பானர்ஜியின் திட்டத்தை நீங்கள் கவாச் என பெயர் மாற்றினீர்கள்.  இந்த கோர விபத்திற்கு யார் காரணம்? நிர்வாகமா? தனி மனிதரா? தமிழகத்தில் சிறிய விஷயம் நடந்தாலும் உடனே முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சொல்லும் பாஜக இதுவரை ஏன் வாயைத் திறக்கவில்லை.

வந்தே பாரத்  ரயிலைத் தொடங்கும்போது நேரடியாக அங்குச் சென்று விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை?. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் நடந்த இந்த விபத்துக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?”  எனக் கேட்டுள்ளார்.