ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த 4,400 ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கினார்.

இலங்கை மக்கள் நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட தங்களது அன்றாட தேவைகளுக்கு வீதிகளில் அல்லாடி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கி இருக்கின்றனர்.

இலங்கை மக்களுக்கு உதவ பொதுமக்கள் நிதியளிக்க முன்வருமாறு தமிழ் நாடு அரசு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி தனது உண்டியல் சேமிப்பு பணம் முழுவதையும் மாவட்ட ஆட்சியர் மூலம் இந்த நிதிக்கு பங்களித்துள்ளார்.

சிறுமியின் செயலை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.