பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டிக்காக பர்மிங்ஹாமில் தங்கியுள்ள இந்திய அணியினரின் தனிமையைக் கெடுக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த சில விருந்தினர்கள் நடந்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த விருந்தினர்கள் மூவருக்கும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள், தங்களின் குடும்பத்தினருடன் பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஹியாத் ரீஜென்சி ஹோட்டலில் தங்கியுள்ளனர். அதே ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அந்த 3 விருந்தினர்கள்தான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.

இந்திய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களை அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது மற்றும் ஹோட்டலின் லாபியில் கத்தி கூச்சல் போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் அந்த 3 விருந்தினர்களும். எனவே, அணி நிர்வாகம் சார்பில் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில், மீண்டும் அவ்வாறு நடந்துகொண்டால், மறு எச்சரிக்கை எதுவுமின்றி காலிசெய்ய வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.