டில்லி:

சென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் மத்தியஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்துள்ளது.

இந்த மனுமீதான விசாரணை உச்சநீதி மன்ற விடுமுறைகால அமர்வில்  இன்று நடைபெறுகிறது.


மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5  மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த திட்டத்தால், சேர்வராயன், கல்வராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும், பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும்,  சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்  என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஏராளமான மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர்.

8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பகுதியை சேர்ந்த  விவசாயி பி.வி.கிருஷ்ண மூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார்பிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உள்பட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை இன்று (ஜூன்3) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதம் அன்புமணி ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.