பாட்னா

ம்பானிக்கு ரூ. 30000 கோடி அளித்த பிரதமர் மோடி விவசாயிகளுக்கு தினம் ரூ. 17 அளிக்க உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னா நகரில் இன்று ஜன் அகன்க்‌ஷா என்னும் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பீகார் மாநில மகா கூட்டணியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த பேரணி ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பு ஏற்ற பிறகு பீகாரில் கலந்துக் கொள்ளும் முதல் பொது நிகழ்வாகும்.

இந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “ நாங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தோம். அதைப்போல் மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் கடன்களை தள்ளுபடி செய்தோம்.

பிரதமர் மோடி வருடம் தோறும் 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக கூறினார். இதுவரை எத்தனை பேருக்கு பணி கிடைத்துள்ளது?

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6000 வருடத்துக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். அதாவது அனில் அம்பானிக்கு ரூ.30000 கோடி அளிக்கும் மோடி ஒரு ஏழை விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.17 அளிக்க உள்ளார்.

பாட்னா பல்கலைக்கழகத்துக்கும்  பீகார் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும் மோடி என்ன செய்தார்? ஒரு காலத்தில் புகழ்பெற்ற கல்வி நகரமாக இருந்த பீகார் மாநிலம் தற்போது கல்வியில் தரம் தாழ்ந்தது மட்டுமின்றி வேலைவாய்ப்பு அளிப்பதிலும் கடுமையாக பின் தங்கி உள்ளது.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும் பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும்.

பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் துணையுடன் காங்கிரஸ் பாஜகவை கடுமையாக வீழ்த்தும்” என குறிப்பிட்டுள்ளார்.