சென்னை:
அடுத்தவர்களின் பாடலை திருடி தனது பெயரில் போட்டுக்கொள்கிறார் வைரமுத்து என்று இளம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக வைரமுத்து மீதான புகார்கள் தமிழகத்தல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அவர் ஆண்டாள் குறித்து பேசியது பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்தார். அது தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது திருட்டுப் பாட்டு குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
வைரமுத்து மீது 96 என்ற படத்தின் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, தனது பாடலை வைரமுத்து திருடி விட்டதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியானது 96 என்ற திரைப்படம். இந்தபடத்திற்குப் பாடல்கள் எழுதியவர் கார்த்திக் நேத்தா. படத்தின் பாடல்கள் பெரிய பாராட்டைப் பெற்றதால் தற்போது பல படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை கார்த்திக் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து மற்ற பாடலாசிரியர்களின் பாடல்களை திருடி தனது பெயர் போட்டுக்கொள்வதாக திருட்டு பட்டம் சூட்டி உள்ளார்.
“வைரமுத்து தான் மிகவும் மதிக்கும் கலைஞர். ஆனால் இதைப் போல பல பாடலாசிரியர்களின் பாடல்களை தனது பெயரில் அவர் போட்டுக்கொள்கிறார்’ என்றவர், கடந்த 2011ம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்த ’சரசர சாரக்காத்து வீசும்போது’ என்ற பாடலை தான்தான் எழுதியதாகவும் அந்த பாடலின் சில வரிகளை மட்டும் மாற்றிப்விட்டு தான் எழுதியது போல வைரமுத்து பயன்படுத்திக்கொண்ட தாகவும் கார்த்திக் நேத்தா பகிரங்கப் புகார் கூறியுள்ளார்.
வைரமுத்து மீது பாடல் திருட்டு குற்றச்சாட்டு கோலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.