தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டு இருக்கிறார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்து வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி, கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
இந்தநிலையில், “ பிடர்கொண்ட சிங்கமே பேசு’’ என்ற தலைப்பில் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.
அந்த கவிதை..
பிடர்கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு
சூள்கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே நீ
பேசுவாய் வாய் திறந்து
யாதொன்றும் கேட்க மாட்டேன்
யாழிசை கேட்க மாட்டேன்
வேதங்கள் கேட்க மாட்டேன்
வேய்ங்குழல் கேட்க மாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே நின்
குரல் மட்டும் கேட்க வேண்டும்
அந்த வீடியோ