டில்லி
உஜ்ஜைனி கோவில் அர்ச்சகர்கள் அரசரைப் போல் வாழ்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்றது உஜ்ஜைனி. இங்குள்ள காளி கோவில் மிகவும் புகழ் பெற்றது. விக்கிரமாதித்த மகாராஜாவால் பூஜிக்கப்பட்டது இந்த கோவில் என வரலாறுகள் தெரிவிக்கின்றன. உஜ்ஜைனிக்கு நாடெங்கும் இருந்து பல பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த உஜ்ஜைனியில் உள்ள சிவன் கோவிலின் முக்கிய கடவுள் மகாகாளேஸ்வர் ஜோதிர்லிங்கம் ஆவார். மிகவும் பழமையான இந்தக் கோயில் பராமரிப்புக்காக புதிய வழிபாட்டு முறை அமுலாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதி மன்ற அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இந்த பழம் பெரும் கோயிலையும் கோவிலின் சிலைகளையும் பாதுகாக்க புதிய வழிபாட்டு முறைய உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான அருண் மிஸ்ரா இந்தக் கோவிலை பார்வை இட்டார். அதன் பின் இந்த ஜோதிர்லிங்கத்துக்கு அபிஷேக முறைகளில் சில கட்டுப்பாடுகளை உச்ச நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அபிஷேகத்துக்கு சுத்தீகரிப்பட்ட நீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், பால் ஒரு அளவுக்கு மேல் அபிஷேகம் செய்யக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கோயிலுக்கு வருகை தந்த நீதிபதி அருண் மிஸ்ரா, “இங்குள்ள அர்ச்சகர்கள் மிகவும் வசதியான நிலையில் உள்ளனர். அரசர்களே அசந்து போகும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கைத் தரம் உள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் முன்னால் அரசர்களின் அரண்மனையே தோற்று விடும் அமைப்பில் உள்ளது. பல கோயில் அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகையில் இவர்களின் இந்த வாழ்வு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
இந்த கோயிலின் முழுக் கட்டுப்பாடும் இவர்களிடமே உள்ளது. இவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை முன்னேற்ற கோயில் பணத்தை செலவழிக்கின்றார்கள், ஆனால் பக்தர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கோயிலுக்கு வரும் நிதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்” என கூறி உள்ளார்