ஓ.பி.எஸ். – தினகரன்

சென்னை,

 டிடிவி தினகரன் பேச்சு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்,   ‘நாங்கள் அத்தை இல்லை… மாமா’ என ஓபிஎஸ் கிண்டலாக பதில் கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக  டிடிவி தினகரன் அணியினர் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். தினசரி   புதுப்புது குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர், துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள் விருதுநகர் வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் மாபா பாண்டியராஜன் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர்.   இரட்டை இலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்,  ‘இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும்’ என்று கூறினார்.

மேலும் செய்தியாளர் ஒருவர்,  டிடிவி.தினகரன் கூறும்போது அத்தைக்கு மீசை முளைக்காது; அப்படியே முளைத்தாலும் அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளாரே’’ என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘‘நாங்கள் அத்தை இல்லை… மாமா,’’ என்று  கிண்டலாக பதில் கூறினார். அப்போது அவருடன் மா.பா.பாண்டியராஜன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.