
சென்னை,
தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டு மாதம் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.ஆதார்
தொடர்பாக தமிழகம் முழுவதும் 301 இடங்களில் சிறப்பு முகாம் இன்று முதல் 2 மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
பொதுமக்களின் வசதிக்காக, ஆதார் உதவி மையங்கள் தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை செயல்படும்.
இந்த ஆதார் உதவி மையங்களில், ஆதார் எண்ணிற்கு ஏற்கனவே பதிவுகளை செய்துவிட்டு ஆதார் எண், ஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கை விரல் ரேகை மற்றும் கருவிழிகளைப் பதிவு செய்து, சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
இந்த எண்ணைக்கொண்டு, அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து, விரல்ரேகை, கருவிழியினைப் பதிவு செய்து 30 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது 10 ரூபாய் மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel