சென்னை,
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 85 அரசு பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறுகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவித்துள்ளார்.

அரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்க ளுக்கு தேவையான பணியாளர்களை எழுத்து தேர்வு மூலமும், நேர்முக தேர்வு மூலமும் நியமனம் செய்து வருகிறார்கள்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வெவ்வேறு வகையான பணியிடங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கு தேவையானவர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதற்கான தகுதி தேர்வை, வேலைக்கு தகுந்தார்போர் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என தனித்தனியாக ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
தற்போது குரூப்-1 தேர்வுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–1 தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான அறிவிக்கையை கடந்த 9–ந்தேதி வெளியிட்டது.
85 காலிபணியிடங்களுக்கு டிசம்பர் 8–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19–ந்தேதி நடக்கிறது.
தகவல்களை மாற்றக்கோரி வரும் விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு கட்டண சலுகையை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
உண்மையை மறைத்து தேர்வு கட்டணம் செலுத்தாமல் உள்ள விண்ணப்பதாரர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel